ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிச.29-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: இரா.முத்தரசன் அறிவிப்பு

சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று பேசினார். உடன், இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் போ.லிங்கம், பொதுச் செயலாளர் மு.வீரபாண்டி யன், தலித் உரிமைகள் இயக்கத்தின் தேசிய தலைவர் ராமமூர்த்தி, க.மாரிமுத்து எம்எல்ஏ உள்ளிட்டோர். படம்: ம.பிரபு
சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று பேசினார். உடன், இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் போ.லிங்கம், பொதுச் செயலாளர் மு.வீரபாண்டி யன், தலித் உரிமைகள் இயக்கத்தின் தேசிய தலைவர் ராமமூர்த்தி, க.மாரிமுத்து எம்எல்ஏ உள்ளிட்டோர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி டிச.29-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலகுழு கூட்டம் சென்னையில் நேற்றுநடந்தது. இயக்கத்தின் மாநில துணை தலைவர் போ.லிங்கம், பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன், தலித் உரிமைகள் இயக்கத்தின் தேசிய தலைவர் ராமமூர்த்தி, க.மாரிமுத்து எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: பிரதமர் மோடி மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளே குஜராத் தேர்தல் வெற்றிக்கு காரணம் என்றுகொண்டாடுகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் அந்த வளர்ச்சிப் பணிகள் ஏன் வெற்றி பெறவில்லை.

இந்தியா ஓர் இந்து மத நாடுஎன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பகிரங்கமாக கூறுகிறார். அவரது பேச்சு ஆபத்தானது. நாட்டின்ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி வரும் 29-ம் தேதி ஆளுநர் மாளிகைமுற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வாரிசு அரசியல் எனபலரும் விமர்சிக்கின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் தங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்ட பிறகு விமர்சித்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in