Published : 13 Dec 2022 03:17 PM
Last Updated : 13 Dec 2022 03:17 PM

உருவாகிறது TACTV OTT APP - அரசு கேபிள் டிவி நிறுவன செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கோப்புப்படம்

சென்னை: புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.13) நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்ட்டது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.13) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. "அரசு கேபிள் டிவி நிறுவனம்" இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டு "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஒன்றிய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தால் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்க்கு DAS உரிமம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச தரநிலை வரையறை (SD) செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 2017-ஆம் ஆண்டு டிஜிட்டல் சேவையையும், 2018-ஆம் ஆண்டு HD சேவையையும் தொடங்கியது. இந்த டிஜிட்டல் SD/ HD செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிறுவனம் 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 + GST என்ற கட்டணத்தில் டிஜிட்டல் முறையில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

இதனிடையே கடந்த 19.11.2022 அன்று ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவைகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடர்பாடுகளை உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்து, வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார்.

மேலும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களைச் சேர்த்து, ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்படவும் ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ. ஜான் லூயிஸ், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ரவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x