கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை அளிக்கும் முறை: தமிழக அரசு விளக்கம்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கவுதம சித்தார்த்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்த மார்ச் மாதம் 7,382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றது. இது சம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்த எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்காத அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல் அரசின் உத்தரவுகளை மீறிய செயல் மட்டுமல்லாமல், சமூக நீதிக்கு எதிரானது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்பட பிற தேர்வு நடைமுறைகளிலும் கலப்புமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். 7382 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், "வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களில் கலப்பு மணம் புதிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இது அரசின் கொள்கை முடிவு" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கலப்பு மணம் புரிந்தவர் அல்ல என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை தகுதி இல்லை. எனவே, பணி விதிகள் தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in