

சென்னை: சென்னையில் 46-வது புத்தகக் காட்சி, ஜன.6-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 46-வது புத்தகக் காட்சியை ஜன.6 முதல் 22-ம் தேதி வரைநந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துவது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேதி உறுதியானதும், திறப்பு விழா தேதி அதற்கேற்ப மாற்றி அமைக்கப்படும்.
கடந்த 45 ஆண்டுகளாக சென்னை உட்பட பல்வேறு புத்தகக் காட்சியை முன்னின்று நடத்தி பபாசியின் வளர்ச்சியை முன்னெடுத்து சென்ற அனைவருக்கும் நன்றி. சென்னை உலக புத்தகக் காட்சி வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.