இபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை முதலில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: இடைக்கால நிவாரணம் கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்த மனுவை முதலில் விசாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனவும், அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தீா்ப்பளித்தாா்.

தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. செப்டம்பர் 5-ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமரவும் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது,
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள்? இதுதொடர்பாக என்னென்ன விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்த விவரங்களை இடைக்கால மனுவாக தாக்கல் செய்ய இபிஎஸ் தரப்புக்கு அனுமதி அளித்து இருந்தனர்.

இதன்படி இபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அதற்கான தேர்தல் தேதியானது எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். அவ்வாறான சூழலில் ஓபிஎஸ் அதிமுக பெயரையோ அல்லது இரட்டை இலை சின்னத்தை கோரியோ ஆணையத்தை அணுக தடை விதிக்க வேண்டும். கட்சிப் பணிகளில் எந்தவித இடையூறுகளையும் விளைவிக்க கூடாது என ஓபிஎஸ்-க்கு தடைவிதிக்க வேண்டும்.

பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை பதிவேற்றம் செய்யாமல் தேர்தல் ஆணையம் இருக்கிறது. இதனால் கட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் விளக்கமனு ஒன்றும் தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில், "இது எங்கள் தரப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தங்களது பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. தேர்தல் ஆணையமும் கட்சி விதிகளின் மாற்றங்களையும் பதிவேற்றம் செய்ய மறுக்கிறது. எனவே இடைப்பட்ட காலத்தில் தேர்தல் எதுவும் அறிவிக்கப்பட்டால் பெரும் சிக்கல் ஏற்படும்" என வாதிடப்பட்டது

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், "தேர்தல் ஆணையத்தை ஒரு எதிர்மனுதாரராக சேர்த்து இடைக்கால நிவாரணம் கோரி எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்த இடைக்கால மனுவை முதலில் விசாரிக்க கூடாது. பிரதான வழக்கையே விசாரிக்க வேண்டும். அதற்கு எங்கள் தரப்பு தயாராக உள்ளது" என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in