மேன்டூஸ் புயல் காரணமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு தினசரி மின்தேவை 6,300 மெகாவாட் டாக குறைந்தது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மேன்டூஸ் புயல் காரணமாக, தமிழகத்தின் தினசரி மின்தேவை 6,300 மெகாவாட்டாக குறைந்தது. கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக தினசரி மின்தேவை இந்த அளவுக்கு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் தினசரி மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட் முதல் 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 9 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தும், கோடை காலத்தில்16 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உயர்ந்தும் காணப்படும்.

இந்நிலையில், மேன்டூஸ் புயல் கடந்த 9-ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது. இதன் காரணமாக, அன்று இரவு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிரான சீதோஷ்ணநிலை காணப்பட்டது. வீடுகளில் மின்விசிறி, ஏசி ஆகியவற்றின் பயன்பாடும் வெகுவாக குறைந்தது.

எனவே, அன்றைய தினம் இரவு தினசரி மின்தேவை 6,300 மெகாவாட் அளவாக குறைந்தது.

இதற்கு முன்பு கடந்த 2016-ம்ஆண்டு டிச.13-ம் தினசரி மின்தேவை 6,409 மெகாவாட் அளவாக இருந்தது. அதன்பிறகு முதல்முறையாக தற்போது தினசரி மின்நுகர்வு இந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, அன்றைய தினம்சென்னை நகரில் இரவு 9 மணிக்கு2,200 மெகாவாட் என இருந்த மின்தேவை நள்ளிரவு 1 மணிக்கு750 மெகாவாட் அளவுக்கு குறைந்தது.

இதனால், அனல்மின் நிலையங்களில் 25 முதல் 30 சதவீதம் அளவு மட்டுமே மின்னுற்பத்தி செய்யப்படுகிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in