Published : 11 Dec 2022 10:14 AM
Last Updated : 11 Dec 2022 10:14 AM

காசிமேட்டில் 200+ படகுகள் சேதம்: நிவாரணத் தொகை வழங்க மீனவர்கள் கோரிக்கை

சென்னை

‘மேன்டூஸ்’ புயல் தாக்கியதால் காசிமேட்டில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன. 3 விசைப் படகுகள் கடலில் மூழ்கின. சேதம் அடைந்த படகுகளை உடனடியாக கணக்கெடுப்பு செய்து நிவாரணத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையின் முக்கிய மீன்பிடி துறைமுகமாக இருப்பது காசிமேடு. இங்கு 1,300-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான பைபர் படகுகளும், 850-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் உள்ளன. இங்கு தினமும் 1,000 டன் மீன் வரத்து மூலம் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.

வங்கக் கடலில் உருவான ‘மேன்டூஸ்’ புயல், நேற்று முன்தினம் நள்ளிரவு கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. இதில், காசிமேடு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன. இதனால், மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்த படகு உரிமையாளர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டு, மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து, மீனவர்கள் கூறியது:

காசிமேடு மீன்பிடித் துறைமுகம், ஒவ்வொரு புயலின்போதும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக யாரும் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகளையும் கரையில் பத்திரமாக கட்டி வைத்தோம். நள்ளிரவில் புயல் கரையை கடந்தபோது வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கி, கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதில், 200-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. 3 விசைப் படகுகள் கடலில் மூழ்கியுள்ளன.

புயலால் எங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்த படகுகளை சீரமைத்த பிறகுதான் மீண்டும் மீன்பிடி தொழிலுக்குச் செல்ல முடியும். எனவே, மாநில அரசு உடனடியாக சேதம் அடைந்த படகுகளை கணக்கெடுத்து உரிய நிவாரணத் தொகையை விரைவாக வழங்க வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காசிமேட்டில் சேதம் அடைந்த படகுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடைந்ததும் நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றனர்.

சேதம் அடைந்த படகுகள் கணக்கெடுக்கும் பணி முடிந்ததும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x