Published : 11 Dec 2022 10:48 AM
Last Updated : 11 Dec 2022 10:48 AM

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்

மேன்டூஸ் புயலால் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேன்டூஸ் புயல் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் பிடிப்புபகுதிகளில் மிக கன மழை, கனமழை, மிதமான மழை என, பெய்துவருகிறது. இதனால், பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னை குடிநீர் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

ஆகவே, புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் காலை நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து விநாடிக்கு 140 கன அடியாக வந்து கொண்டிருந்த நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு2,795 கன அடியாக இருந்தது. இதனால்,நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடிஉயரம் கொண்ட புழல் ஏரியில் 2,508 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், 17.52 அடி நீர்மட்டம் இருக்கிறது. விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதே போல், நேற்று முன்தினம்காலை நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து மழை நீர், கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் என, பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 595 கனஅடியாக இருந்தது. அந்த அளவு நேற்று காலை விநாடிக்கு 2,005 கனஅடியாக அதிகரித்தது.

ஆகவே, நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,681மில்லியன் கனஅடியாகவும், நீர் மட்டம் 33.54 அடியாகவும் உள்ளது. விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 709 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை விநாடிக்கு 2,177 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 2,864 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், 21.04 அடி நீர் மட்டமும் உள்ளது.விநாடிக்கு நூறு கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரிக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 36 கனஅடி என இருந்த நீர் வரத்து, நேற்று காலைவிநாடிக்கு 287 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆகவே, 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 18.86 அடிஉயரம் கொண்ட சோழவரம் ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி, நீர் இருப்பு 554 மில்லியன் கனஅடியாகவும், நீர் மட்டம் 12.97 அடியாகவும் இருக்கிறது.

கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு நேற்று முன்தினம்காலை நீர் வரத்து இல்லாத நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 35 கனஅடி நீர் வந்து கொண்டிக்கிறது. ஆகவே, 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 36.61அடி உயரம் உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு முழுமையாக நிரம்பி, விநாடிக்கு 35 கனஅடி உபரிநீர் வெளியேறி வருகிறது என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆவடியில் 17 செமீ, திருத்தணியில் 16 செமீ கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, சோழவரம் ஆகிய இடங்களில் தலா 13 செமீ, செங்குன்றம், ஜமீன் கொரட்டூர், ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 12 செமீ மழை பெய்துள்ளது.

தரைப்பாலம் நீரில் மூழ்கியது

மழை காரணமாக, திருவள்ளூர் அருகே போளிவாக்கத்தில் உள்ளசித்தேரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. அந்த நீரால், திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் மற்றும் மழைநீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x