Published : 09 Dec 2022 04:06 PM
Last Updated : 09 Dec 2022 04:06 PM

மாண்டஸ் புயல் | தேசிய, தமிழக பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நிலைநிறுத்தம்

சென்னை: மாண்டஸ் புயலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் "மாண்டஸ்" புயல் சின்னம் காரணமாக - கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்கள் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (டிச.8) 36 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 4.15 மி.மீ. ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 26.66 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.05 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள்: நாகப்பட்டினம் 26.66 (மி.மீ.), ராமநாதபுரம் 15.49 (மி.மீ.), செங்கல்பட்டு 14.71 (மி.மீ.), சென்னை 13.75 (மி.மீ.), திருவள்ளூர் 13.20 (மி.மீ.), காஞ்சிபுரம் 13.10 (மி.மீ.), திருவாரூர் 10.61 (மி.மீ.), மயிலாடுதுறை 10.22 (மி.மீ.) மழையும் பதிவாகியுள்ளது.

நேற்று (டிச.8) தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த "மாண்டஸ்" புயலானது மேலும் வலுவடைந்து கடும் புயலாக தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என்றும், மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்று ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கன, மிக கனமழை மற்றும் அதி கனமழைப் பொழிவு ஏற்படும் பகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 09-12-2022 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10-12-2022 திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலைச் சீற்றம் குறித்த எச்சரிக்கை:

  • 9-12-2022 காலை 6.30 மணி முதல் 09-12-2022 இரவு 11.30 வரை கொளச்சல் முதல் கீழக்கரை வரை உள்ள கடலோர பகுதிகளில் 3.0 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்றும்,
  • 9-12-2022 காலை 5.30 மணி முதல் 09-12-2022 இரவு 11.30 வரை வேதாரண்யம் முதல் பழவேர்காடு வரை உள்ள கடலோர பகுதிகளில் 3.5 மீட்டர் முதல் 5.2 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்று இந்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தரைக்காற்று குறித்த எச்சரிக்கை:

09-12-2022 அன்று புயல் கரையைக் கடக்கும்போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • “மாண்டஸ்” புயல் சின்னம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் 8-12-2022 அன்று பல்வேறு துறை அலுவர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
  • கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்களது கடித எண். இஇ1 (4) / 558 / 2022, நாள்: 07.12.2022 -ன் படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக 58.47 லட்சம் நபர்களது செல்பேசிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
  • புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 512 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள 459 படகுகள் பாதுகாப்பாக உள்ளன.
  • தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிப்பிற்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
  • பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.
  • மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.
  • கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்:

  • பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்,
  • பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும், போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
  • பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.
  • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து துறை அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும்.
  • மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.
  • மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.
  • பாதிப்பிற்குள்ளாகும் / தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
  • நிவாரண முகாம்களை தயாராக வைத்திருப்பதோடு, குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்,
  • தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.
  • பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.
  • நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x