சென்னையில் தயார் நிலையில் 169 நிவாரண மையங்கள், 805 மோட்டார் பம்புகள் - ‘மேன்டூஸ்' புயலை எதிர்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

`மேன்டூஸ்' புயல் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மக்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறை. படம்: ம.பிரபு
`மேன்டூஸ்' புயல் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மக்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறை. படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் 'மேன்டூஸ்' புயலை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் 169 நிவாரண மையங்கள் மற்றும் 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள `மேன்டூஸ்' புயல், வட தமிழகம் நோக்கிவரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் உடனே வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளன.

பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றால் முறிந்துவிழும் மரம், மரக்கிளைகளை அகற்றுவதற்காக 272 மர அறுவை இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், 45 பொக்லைன் இயந்திரங்கள், 115 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நவீன<br />சமையல் கூடத்தை தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது. படம்: பு.க.பிரவீன்
சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நவீன
சமையல் கூடத்தை தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது. படம்: பு.க.பிரவீன்

ஒவ்வொரு வார்டிலும் அவசரகால தேவைக்காக ஒரு சிறிய இலகுரக வாகனம் மற்றும் 10 பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்: பொதுமக்கள் மெரினா, பெசன்ட்நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மரங்களின் அருகில் நிற்பதையோ, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின்கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

புயல் மற்றும் மழையின்போது பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களை தெரிவிக்க மாநகராட்சியின் 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களிலும், 94454 77205 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். புகார்களை விரைந்து பெறவும், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக, 10 இணைப்புகளுடன் செயல்பட்டுவந்த 1913 உதவி எண், 50 இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in