Last Updated : 08 Dec, 2022 02:35 PM

 

Published : 08 Dec 2022 02:35 PM
Last Updated : 08 Dec 2022 02:35 PM

வேளச்சேரி - மவுன்ட் பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

புதுடெல்லி: மிக நீண்ட காலமாகக் கிடப்பில் உள்ள வேளச்சேரி - புனித தோமையார் மலை (செயின்ட் தாமஸ் மவுன்ட்) இடையிலான பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்) பாதை விரிவாக்கத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.

இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது: ''சென்னை நகரில் சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து சேப்பாக்கம் வரை கடந்த 1995ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி பறக்கும் ரயில் போக்குவரத்துத் திட்டம் துவங்கப்பட்டது. பின்னர் திருவான்மியூர் வரை 2004ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு வேளச்சேரி வரை கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அன்று விரிவுபடுத்தப்பட்டது.

19.34 தூரத்தில் அமைந்துள்ள இந்த பறக்கும் ரயில் போக்குவரத்து மார்க்கத்தில் 18 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு இந்த பறக்கும் ரயில் போக்குவரத்துத் திட்டத்தை வேளச்சேரியில் இருந்து புனித தோமையார் மலை வரை 5 கி.மீ தூரம் விரிவுபடுத்த தென்னக ரயில்வே திட்டமிட்டது. அதற்கான பணிகளைத் தொடங்கியபோது, துரதிஷ்டவசமாக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 13 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் உள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்து பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளுக்குச் சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கியப் பகுதியாக தென் சென்னை நகரம் அமைந்துள்ளது. எனவே வியாபார விஷயங்களுக்காகவும் தங்களது பணிகள் தொடர்பாகவும் நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக தென்சென்னை இருக்கின்ற காரணத்தினால் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தேவையற்ற இடர்ப்பாடுகளை பொதுமக்கள் சந்திக்க வேண்டிய சங்கடம் நிலவுகிறது. சென்னை மாநகரின் புறநகர் போக்குவரத்துத் திட்டத்தில் வேளச்சேரி - புனித தோமையார் மலை இடையிலான 5 கி.மீ தூரம் பிரதான மார்க்கமாக அமைந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மற்றும் தென்னக ரயில்வே போக்குவரத்துப் பாதைகளின் இணைப்பாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது.

எனவே, வேளச்சேரி-புனித தோமையார் மலை பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டிய அவசரம் நிலவுகிறது. இந்தத் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதன் மூலம் தற்போது சென்னையில், குறிப்பாக, தென் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண முடியும். அது மட்டுமின்றி பொதுமக்களின் போக்குவரத்து இன்னல்களும் குறையும்.

மேலும் சாலைகளில் பெருமளவு வாகனப் போக்குவரத்து மூலம் வெளியாகும் கரிமில வாயு பாதிப்பையும் குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இவற்றிற்கெல்லாம் மேலாக இத்திட்டத்தை நிறைவடையச் செய்வதன் மூலம் சென்னை பறக்கும் ரயில் திட்ட நிர்வாகத்தின் நிதி நிலைமை மேம்படுவதுடன் அதன் செயல்பாடும் அதிகரிக்க வழி வகுக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் மிகுந்த வெற்றிகரமாக அமையும். எனவே, வேளச்சேரி- புனித தோமையார் மலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x