Published : 08 Dec 2022 02:36 PM
Last Updated : 08 Dec 2022 02:36 PM

மாண்டஸ் புயல் | தமிழகத்தில் எங்கெங்கு கனமழை, அதி கனமழை வாய்ப்பு? - முழு விவரம்

மாண்டஸ் புயல் குறித்து விளக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக டிசம்பர் 10-ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாளை (டிச.9) காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை (டிச.8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

தற்போதைய நிலவரப்படி வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும். இதன் காரணமாக 8, 9, 10 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் வியாழக்கிழமை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமையன்று (டிச.9), சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 10-ம் தேதியன்று, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வியாழக்கிழமையன்று தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டரும் சமயங்களில் 60 கி.மீட்டர் வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும். வெள்ளிக்கிழமை (டிச.9) காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில், சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.9-ம் தேதி மாலை முதல் டிச.10-ம் தேதி காலை வரையிலான காலக்கட்டத்தில் வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில், மணிக்கு 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 80 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

தென் தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வியாழனன்று சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் என்ற வேகத்தில் சமயங்களில் 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வெள்ளிக்கிழமையன்று மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 10-ம் தேதி வரை, தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் 10-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x