Last Updated : 07 Dec, 2022 08:50 PM

 

Published : 07 Dec 2022 08:50 PM
Last Updated : 07 Dec 2022 08:50 PM

கோவை கார் வெடிப்பு வழக்கு | ஆட்டோ ஓட்டுநர் உள்பட மேலும் மூன்று பேரை கைது செய்து என்ஐஏ விசாரணை

கோப்புப்படம்

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட மேலும் 3 பேரை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். அவரது வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனப் பொருட்கள் 75 கிலோ, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த முபின், காரில் வெடி பொருட்களை நிரப்பி, மதப் பிரச்சினையை உருவாக்கும் நோக்கில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும், எதிர்பாராத வகையில் காரில் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இவ்வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த அக்டோபர் இறுதியில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நபர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பென் டிரைவ்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, 15 பேரிடம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மூலம் கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் இறுதியில் போத்தனூரைச் சேர்ந்த முகமது தவுபீக்(25), நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான உமர் பாரூக் (39), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ்கான்(28) ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (டிச.7) கைது செய்தனர்.

இதுதொடர்பாக என்ஐஏ வட்டாரங்கள் தரப்பில் கூறும்போது, ‘‘உமர் பாரூக் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கோவையிலிருந்து குன்னூருக்கு குடிபெயர்ந்துள்ளார். கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பான சதித் திட்டத்தை முபின் குன்னூரில் உள்ள உமா்பாரூக் வீட்டிலும் ஆலோசித்துள்ளார். உமர் பாரூக், பெரோஸ்கான் பங்கேற்றுள்ளனர். முபின் குன்னூரில் பாரூக் வீட்டிலும் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார். உமர் பாரூக்கும், முபினும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இவர்களது நண்பரான முகமது தவுபீக் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பான புத்தகங்கள், கையால் எழுதிய ஆவணங்கள் போன்றவற்றை வைத்திருந்துள்ளார். பாரூக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக விசாரிக்க, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதான மூவரிடமும் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x