Published : 07 Dec 2022 03:48 PM
Last Updated : 07 Dec 2022 03:48 PM

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்துக்காக 30 ஆண்டுகள் குத்தகைக்கு கோயில் நிலம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்காக அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்குச் சொந்தமான நிலம் காலவரம்பின்றி குத்தகைக்கு விடபடுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில், "அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை மாதம் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும். நிலம் வழங்கப்பட்டதற்கான நோக்கத்திற்காக அல்லாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான பிற வழக்குகள் பட்டியிலிடப்படாததால் அனைத்து வழக்குகளையும் சேர்த்து பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x