Published : 07 Dec 2022 02:02 PM
Last Updated : 07 Dec 2022 02:02 PM

வானிலை முன்னறிவிப்பு: டிச.10 வரை தமிழகம், புதுவையில் கனமழை, அதி கனமழை வாய்ப்பு

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.7) மாலை புயலாக வலுவடையவுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் இம்மாதம் 10-ம் தேதி வரை கனமழை மற்றும் அதி கனமழைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.7) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை (டிச.7) 11 நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து தென்கிழக்கு 770 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து 690 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது தொடர்ந்து இன்று (டிச.7) மாலை புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக 8,9, மற்றும் 10 தேதிகளில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும்" என்றார்.

இது தொடர்பான சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவல்: "நேற்று (06.12.2022) தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று (07.12.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று (நவ.7) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

9ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 8-ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் பலமான காற்று வீசக்கூடும். 8ம் தேதி மாலை முதல் 9ம் தேதி மாலை வரை வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், 9ம் தேதி மாலை முதல் 10ம் தேதி காலை வரை மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

தெற்கு தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலமான காற்று 8ம் தேதி மாலை முதல் 9ம் தேதி மாலை வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், 9ம் தேதி மாலை முதல் 10ம் தேதி காலை வரை மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் வீசக் கூடும். 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் 10ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்னதாக இன்று காலை 8 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது சென்னையில் இருந்து தென் கிழக்கில் 830 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து நகர்ந்து இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x