Published : 07 Dec 2022 06:36 AM
Last Updated : 07 Dec 2022 06:36 AM

அமைச்சரவையில் உதயநிதி: விரைவில் மாற்றம் வரும் என எதிர்பார்ப்பு

சென்னை: திமுகவில் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. கட்சியின் இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உதயநிதியின் பிறந்தநாளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என நிர்வாகிகள் பட்டாளமே அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது.

பிறந்த நாள் அன்று நடந்த நிகழ்ச்சியில் ‘தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா’ என உதயநிதியிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, அதை முதல்வர்தான் முடிவு செய்வார் என்றார். இதனிடையே, அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உதயநிதிக்கு சாதகமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

முக்கிய பதவியை உதயநிதி பெற்றுவிட்ட நிலையில், அடுத்தது அமைச்சராகவும் முக்கியத்துவம் பெறவேண்டும் என அமைச்சர்கள் உள்ளிட்ட அவரது நலன் விரும்பிகள் எண்ணுகின்றனர். திமுக அரசு பொறுப்பேற்றதுமே இதே கருத்துகளை அமைச்சர்கள், நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், அப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை அமைச்சர்களின் கருத்துகளுக்கு உயிர் வந்துள்ளது. அவர்கள் எண்ணம் பொங்கலுக்குள் நிறைவேறும் நிலையில் உள்ளதாகவும், அமைச்சரவையில் இடம் பெறும் உதயநிதி, இளைஞர் நலத்துறையை கவனிக்கப் போவதாகவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இதுதவிர ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x