

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்றுநடந்தது.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங்பேடி, மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரித்தார்.
இந்நிகழ்வில் மேயர் பிரியா, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ நகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் மற்றும் அவரது குழுவினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து சகோதரத்துவ நகரங்களின் இணைப்பாக 2 மாநகரங்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு விஷயங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும்வகையில் 2 மேயர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவோம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கைஅமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகர மேயர் மற்றும் அவரது குழுவினர் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ்குமார், சான் ஆன்டோனியோ நகர முன்னாள் மேயர் பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தூதர் ஜூடித் ரவின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.