Published : 15 Dec 2016 04:12 PM
Last Updated : 15 Dec 2016 04:12 PM

திருவள்ளூர் மாவட்டம் 2 நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்புநிலை 2 நாட்களுக்குள் திரும்பும் வகையில் அனைத்துப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

'வார்தா' புயல் மழையினால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று கள ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கள ஆய்வு செய்த போது மின்சார வாரியப் பணியாளர்களுடன் இணைந்து அவர்களுக்கு உள்ள சவாலான பணியான மின்கம்பங்கள் மற்றும் மின்வடங்களை சரிசெய்யும் பணியினை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கி செயல் வடிவிற்கு கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டார்.

அதன் விளைவாக அப்பகுதியில் புயல் காற்றினால் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு முதன்மை மின் பகிர்மான நிலையத்திலிருந்து துணை மின் நிலையங்களுக்கு மின்சார விநியோகம் சீரான முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் மின்விநியோத்திற்கு இடையூறான பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வயல் வெளிகள் மற்றும் சாலையோரங்களில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி 60% மின் விநியோகம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தங்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

புயல் மழை காரணமாக பூச்சிகளால் மற்றும் பாதுகாக்கப்படாத அசுத்த நீரினால் ஏற்படும் தொற்று நோய்கள் ஏற்படாவண்ணம் 10 புகை தெளிப்பான்களுடன் பூச்சியல் வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயல் மழையினால் சாய்ந்த மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்த மரம் வெட்டுபவர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மரம் வெட்டும் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்புநிலை 2 நாட்களுக்குள் திரும்பும் வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்'' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x