Published : 06 Dec 2022 04:59 AM
Last Updated : 06 Dec 2022 04:59 AM

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ‘மேன்டூஸ்’ புயலாக நாளை உருவாகிறது: முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சென்னை: அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ‘மேன்டூஸ்’ புயலாக வலுப்பெற்று 8-ம் தேதி வடதமிழக கரையை நெருங்கும். அப்போது கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டிச.5-ம் தேதி (நேற்று) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, 6-ம் தேதி (இன்று) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து 8-ம் தேதி காலை வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி அருகே வந்தடையக்கூடும்.

இதன் காரணமாக, 6-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 7, 8-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக் கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

9-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு ‘மேன்டூஸ்’ என்று ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் பெயரிடப்படும். அதிகனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x