Published : 06 Dec 2022 05:55 AM
Last Updated : 06 Dec 2022 05:55 AM

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட தமிழக அரசு விரைவில் நிதி ஒதுக்கும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை

சென்னை: சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த எம்.எஸ்.குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமனுவில், ‘‘முன்பு காஞ்சிபுரம்மாவட்டத்தில் செங்கல்பட்டு இருந்ததால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செங்கல்பட்டில் இயங்கியது. ஆனால் தற்போது செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்னரும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் செங்கல்பட்டிலேயே இயங்கி வருகின்றன.

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழக்குதொடர்பாக செங்கல்பட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்கட்ட வேண்டும். தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள அமர்வு நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் வெவ்வேறு பகுதிகளில் இயங்கிவருகின்றன. குறிப்பாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நகராட்சி பள்ளிவளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நீதிமன்றங்கள் பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வருவதால் வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் போதிய வசதிகள் இல்லை. முன்சீப்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வராண்டாவில் அமரும் நிலை உள்ளது. முதல் தளத்தில் கழிப்பறைஇருந்த இடத்தில் தற்போது முதன்மை முன்சீப் வளாகம் உள்ளது. பொதுமக்களுக்கான கழிப்பிட வசதியும் இல்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்புதூர், உத்திரமேரூர் மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் புதிய கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. ஆனால் மாவட்டத் தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்டநீதிமன்றங்கள் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியசிறுகாவேரிபாக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.அன்பழகனும், உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் வழக்கறிஞர் சி.டி.மோகன் மற்றும் அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அரசு தரப்பில்,"காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டஉயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அனுப்பிய கடிதங்களை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஆராய்ந்து, இதற்காக ஆகும் செலவு குறித்து திருத்தியமதிப்பீடு செய்து, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட தேவையான நிதியை தமிழக அரசு விரைவாக ஒதுக்கீடு செய்யும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x