Last Updated : 05 Dec, 2022 04:29 PM

1  

Published : 05 Dec 2022 04:29 PM
Last Updated : 05 Dec 2022 04:29 PM

இணையதளத்தில் எங்களை மோசமாக விமர்சித்தால் நடவடிக்கை: தமிழிசை எச்சரிக்கை

புதுச்சேரி: ''மேடையில் உள்ள அத்தனை பேரும் தகுதியின் அடிப்படையில்தான் அந்தந்த பதவிகளில், பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறோம். இணையதளத்தில் மோசமாக எங்களை விமர்சனம் செய்தீர்கள் என்றால் அதற்கு பின்பு நீங்களும், எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு நடவடிக்கை இருக்கும்'' என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை, காமராசர் மணிமண்டபத்தில் ''மோடி@20 நனவாகும் கனவுகள்'' மற்றும் ''அம்பேத்கர் & மோடி" தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் முருகன் முன்னிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை நூல்களை வெளியிட, முதல்வர் ரங்கசாமி முதல் பிரதிகளை பெற்றார்.

முன்னதாக, மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை விளக்கும் காட்சியரங்கினையும் துணைநிலை ஆளுநர் திறந்து வைத்து பார்வையிட்டார். இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியது: ''பிரதமர் மோடி நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இந்தப் புத்தகம் தமிழில் வெளிவந்திருக்கிறது.

பிரதமரின் நல்ல திட்டங்கள் விமர்சிக்கப்படுகிறது. பாரதப் பிரதமர் திட்டங்கள் விமர்சிப்பதற்கு அல்ல என்பதை தமிழக மக்களுக்கு எடுத்துக் கொள்வதற்காக இந்தப் புத்தகம் வெளிவருகிறது. புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற வேண்டும் என்பது பாரத பிரதமரின் கனவு. ஆனால், இதை 'டெஸ்ட்' புதுச்சேரி ஆக்கிக் கொண்டிருப்பதாக சிலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்படி பிரதமர் மோடி மேம்படுத்துவார். அதற்காகத்தான் பல விமர்சனங்களை அவர் தாங்கிக் கொள்வார். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் பிரதமர் ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கான முடிவாக தான் இருக்கும். வேறு எதற்கான முடிவாகவும் இருக்காது. அதேபோல பல ஆண்டுகளாக அவரிடம் பாடம் கற்ற நாங்கள் ஏதாவது ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கான முடிவாக தான் இருக்கும். அத்தகைய பாடத்தை தான் கற்று இருக்கிறோம்.

அம்பேத்கர், மோடி ஆகியோரை இணைத்து "அம்பேத்கர் & மோடி" என்ற புத்தகத்திற்கு இளையராஜா முகவுரை எழுதியிருக்கிறார். அதனால் அவர் சந்தித்த விமர்சனங்கள் அதிகம். முதலில் விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் இந்த புத்தகத்தை படியுங்கள். படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். இதைப்போல சாதனை செய்த பிரதமர் இருக்க முடியாது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஒப்புக்கொள்ள வில்லை என்றால் விமர்சனம் செய்யும்போது நாகரிகமாக விமர்சனம் செய்யுங்கள்.

இணையதளத்தில் மோசமாக எங்களை விமர்சனம் செய்தீர்கள் என்றால் அதற்கு பின்பு நீங்களும், எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு நடவடிக்கை இருக்கும். நீங்கள் பேசும் அளவிற்கு நாங்கள் இல்லை. மேடையில் உள்ள அத்தனை பேரும் தகுதியின் அடிப்படையில் தான் அந்தந்த பதவிகளில், பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் மக்கள் நலனுக்காக தான் இருக்கிறார்கள்.

இந்தப் புத்தகங்களை படித்து மத்திய அரசு எவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். விமர்சனம் செய்பவர்களை தேடிச்சென்று புத்தகங்களை சேருங்கள்'' என்று குறிப்பிட்டார். நிகழ்வில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய். ஜெ சரவணன்குமார்உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x