புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் டிச. 7 முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் டிச. 7 முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on

சென்னை: அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (டிச. 5) உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும்.

பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 8-ம் தேதி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் நிலைபெறும். இதனால், வரும் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போது தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் டிச. 4-ம் தேதி (இன்று) சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

டிச. 4-ம் தேதி (இன்று) அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்திலும், டிச. 5, 6-ம் தேதிகளில் 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in