Published : 03 Dec 2022 05:22 AM
Last Updated : 03 Dec 2022 05:22 AM

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் 3 நாட்கள் மிதமான மழை வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் வரும் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 8-ம் தேதி வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளது. மேலும், கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக 3 நாட்கள் மிதமான மழை பெய்யக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதிகாற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும்.

பிறகு, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 8-ம் தேதி வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி களின் அருகில் நிலவக் கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிச. 3-ம் தேதி (இன்று) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

டிச. 4-ம் தேதி சில இடங்களிலும், 5-ம் தேதி தென் தமிழகத்தில்சில இடங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை,புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x