Published : 03 Dec 2022 05:27 AM
Last Updated : 03 Dec 2022 05:27 AM

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த தமிழகத்துக்கு ரூ.10,790 கோடி: மத்திய அரசு ஒதுக்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்காக, மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் 3.25 கோடி வீட்டுமின் இணைப்புகளும், 22.87 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 9.75 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன.இந்நிலையில், தமிழகம் முழுவதும்அனைத்து மின் இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின் சீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ்,நாட்டில் உள்ள 13 மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.10,790 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக ரூ.8,600 கோடி வழங்கப்படும்.

ஸ்மார்ட் மீட்டர்களை பெறுவதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய வரும் 15-ம் தேதிக்குள் டெண்டர் விடப்படும். வரும் 2025-26-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை, தி.நகரில் 1.09லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டர்கள் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ப்ரீபெய்டு திட்டமாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இலவச மின் இணைப்புகளான விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின்இணைப்புகளுக்கும் ஸ்மார்ட்மீட்டர் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x