Published : 03 Dec 2022 05:50 AM
Last Updated : 03 Dec 2022 05:50 AM

பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றிய 452 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறாகச் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து இனக்கட்டுப்பாடு செய்யும் பணி மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெரு நாய்களைப் பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்களும், ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்களும் வாகன ஓட்டுநர் ஒருவரும் உள்ளனர். நாய்களைப் பிடிப்பதற்காக 64 வலைகளும் உள்ளன.

தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, திரு.வி.க.நகர்மண்டலத்துக்கு உட்பட்ட பேசின் பாலம் நாய்இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகியவற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடைமருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த நவ.23 முதல் 29-ம் தேதி வரை மட்டும் 452 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 319 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு, பிறகு பிடித்த இடங்களிலேயே விடப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x