Last Updated : 02 Dec, 2022 06:24 PM

 

Published : 02 Dec 2022 06:24 PM
Last Updated : 02 Dec 2022 06:24 PM

தலைவர்கள், நடிகர், நடிகைகளின் படங்கள் இருக்கக் கூடாது: வாகனங்களில் உள்ள சட்டவிரோத நம்பர் பிளேட்களை அகற்ற உத்தரவு

மதுரை: வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சட்டவிரோத நம்பர் பிளேட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த சந்திரசேகர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய, மாநில மோட்டார் வாகனச் சட்டப்படி மோட்டார் சைக்கிள்களில் விதிமுறைப்படியே நம்பர் பிளேட்கள் இருக்க வேண்டும். ஆனால் வாகன உரிமையாளர்கள் நம்பர் பிளேட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகளின் படங்களை ஒட்டியுள்ளனர். விரும்பும் வடிவங்களில் எண்களை எழுதிக் கொள்கின்றனர். இது சட்டவிரோதமாகும்.

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சட்டவிரோத நம்பர்பிளேட்களை அகற்றவும், அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் திலக்குமார் வாதிடுகையில், மனுதாரர் பாஜக நிர்வாகி. அவர் அளித்த மனுவில் கோரிக்கையை மட்டும் தெரிவிக்காமல், கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் எனமிரட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ஒருகோரிக்கை வைக்கும்போது மனுவில் மிரட்டும் வகையில் கருத்துகளை தெரிவிப்பதை ஏற்க முடியாது. இதனால் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கூறுவது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் நாங்கள் (நீதிபதிகள்) வெளியே வர முடியாது என சொல்வது போல் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் அரசு விதிமுறைப்படியே நம்பர் பிளேட்கள் இருக்க வேண்டும். அதில் எழுத்துக்கள் விதிமுறையைப் பின்பற்றாமல் வேறு வடிவிலோ, தலைவர்கள், நடிகர், நடிகைகளின் படங்களோ இருக்கக் கூடாது.

அதிகபட்ச அபராதம்: இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸார்தினமும் வாகனச் சோதனை நடத்தி, விதிமீறிய நம்பர் பிளேட்களை அகற்ற வேண்டும். விதிமீறல் வாகனங்களையும் பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x