அரசு கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும்: ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

அரசு கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும்: ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
Updated on
1 min read

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அரசு கட்டுப்பாட்டில் இருந்து அனைத்து இந்து கோயில்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தையும் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வருக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் நிறுவனங்களை பல்லாண்டுகளாக அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகளுக்கு எதிரானது.

உச்ச நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு ஒன்றில், தமிழக அரசு எதிர்மனுதாரராக இருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்தது. அதில் ‘கோயில்களில் மதம் சார்ந்த விழாக்களை அரசு நடத்தக்கூடாது. கோயில்களில் ஏதேனும் நிதி சார்ந்த முறைகேடுகள், நிதி சார்ந்த சிக்கல் ஏதேனும் இருப்பின், அதற்கு தீர்வுகாண, குறிப்பிட்ட கால அளவுவரை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களையும், நிறுவனங்களையும் விடுவிக்க வேண்டும். தவறினால், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in