

சென்னை: மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வீட்டில் இருந்தபடியே கைப்பேசியில் உள்ள வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. சென்னையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதில் தினமும் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக, பயண அட்டை முறை, க்யூ ஆர் குறியீடுமுறை ஆகிய முறைகள் உள்ளன.
இந்நிலையில், மெட்ரோ ரயில்பயணிகளுக்கு கூடுதல் வசதியாக, கைப்பேசியில் உள்ள வாட்ஸ்-அப் (கட்செவி) மூலமாக டிக்கெட்எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ்சதுர்வேதி (இயக்கம்) கூறியதாவது: வாட்ஸ்-அப் மூலமாக,டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்-அப் எண் வழங்கப்படும். இது, சென்னை மெட்ரோ ரயில்நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண். இந்த எண்ணுக்கு கைபேசி மூலம் `ஹாய்' என்று குறுந்தகவல் அனுப்பினால்,
`சார்ட் போட்' என்ற தகவல் வரும். அதில் டிக்கெட் எடுப்பதுதொடர்பாக ஒரு தகவல் இருக்கும். அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம்,சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ்-அப் மூலமோ, ஜிபே, யு-பே மூலமோ பணம் செலுத்தினால், டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துவிடும்.
இது, தினசரி பயண டிக்கெட் ஆகும். டிக்கெட்டை ரயில் நிலையநுழைவாயில் உள்ள க்யூஆர்குறியீடு ஸ்கேனரில் காண்பித்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் குறியீடுஸ்கேனரில் காண்பித்து வெளியே செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.