Published : 01 Dec 2022 06:36 AM
Last Updated : 01 Dec 2022 06:36 AM

அறநிலையத் துறையில் அனைத்து வகையிலும் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: அறநிலையத் துறையில் அனைத்து வகையிலும் ஊழல் நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக, கோபுரத்தில் உள்ள கடவுள் சிலையின் முகத்தை துளையிட்டு, சேதப்படுத்தி, சிசிடிவி பொருத்தியுள்ளனர். மக்களின் இறை நம்பிக்கையுடன் விளையாடும் வகையில், திமுக அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இது.

தமிழக கோயில்களுக்குச் சொந்தமான நகைகளை உருக்கி, தங்கக் கட்டியாக்கி, அதிலும் ஊழல் செய்ய முற்படுகின்றனர். அனைத்து வகையிலும் அறநிலையத் துறையில் தொடர் ஊழல் மற்றும் களவு நடைபெறுகிறது.

அர்ச்சகர்களின் பயிற்சிக் காலத்தை 5 ஆண்டில் இருந்து ஓராண்டாகக் குறைக்க நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு ஆதீனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகம அர்ச்சகர் பயிற்சியை ஓராண்டுக்கு சுருக்க முடியாது. எனவே, ஆதீனங்கள், மடாலயங்கள், ஆன்மிக வழிபாடுகள், மரபுகளில் தலையிடுவதை தமிழகஅரசு கைவிட வேண்டும். கோயில்களின் பண்பாடு, மரபைச் சிதைக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

போதை பழக்கம் அதிகரிப்பு: இதேபோல, அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ‘திமுக ஆட்சியில் மக்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புழக்கத்துக்கு திமுகவினரே உதவுகின்றனர். அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருள் கிடைக்கும் அளவுக்கு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

அடுத்தமுறை போதைப் பொருள் ஒழிப்பு குறித்து முதல்வர் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றபோது சிக்கிய, தனது கட்சிக்காரர் குறித்து குறிப்பிடுவார் என நம்புவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x