Published : 01 Dec 2022 07:19 AM
Last Updated : 01 Dec 2022 07:19 AM

பொங்கல் பண்டிகைக்கு 100, 200 மி.லி. அளவுகளில் ஆவின் நெய்: அதிக அளவில் தயாரிக்க திட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகை காலத்தில் ஆவின் நெய் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் விதமாக, 100 மிலி மற்றும் 200 மிலி அளவுகளில் அதிகளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் பால் விற்பனைக்கு பிறகு, மீதமுள்ள 10 லட்சம் லிட்டர் பாலில் இருந்து பால் பவுடர் மற்றும் வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. வெண்ணெய்யை உருக்கி, நெய் தயாரிக்கப்படுகிறது. அதன்படி, தினசரி 5 டன் அளவில் நெய் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை காலத்தில், 100 மிலி மற்றும் 200 மிலி ஆவின் நெய் அதிக அளவில் தயாரித்து, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 100 மிலி, 200 மிலி ஆவின் நெய் அதிக அளவில் தயாரித்து. விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 லட்சம் எண்ணிக்கையிலான 100 மிலி, 200 மில்லி ஆவின் நெய் பாட்டில்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நெய் தயாரிப்பை பொருத்தவரை திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆலைகளில் தயாரித்து, பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படும். ஆவின் நெய் 100 மில்லி லிட்டர் முதல் 5 லிட்டர் வரை பல அளவுகளில் கிடைக்கிறது. இதுதவிர, பண்டிகைக் காலத்தில் பல்வேறு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x