ஊதியமும் இல்லை; விடுப்பும் எடுக்க முடியவில்லை: எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் வேதனை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சிவகங்கை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மாற்றுப்பணி மூலம் நிரந்தர இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தனர்.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் பள்ளிகளுக்கே மாற்றியதை அடுத்து, இந்த கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூடப் போவதாக தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தொடர்ந்து எல்கேஜி, யுகேஜிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பாடம் கற்பிக்க ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஊதியம் வழங்கப்படும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த அக்டோபரில் நியமிக்கப்பட்ட அவர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப் படவில்லை. தற்காலிகமாக நியமிக்கப்படுவோருக்கு மாதம் ஒருநாள் சிறப்பு விடுப்பு தருவர். ஆனால் அதுவும் அறிவிக்கப்படாததால் அவர்களால் விடுப்பும் எடுக்க முடியவில்லை. அதோடு, பயிற்சியும் வழங்கப்படவில்லை. இதனால் தாங்கள் சிரமம் அடைந்து வருவதாக தற்காலிக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in