Published : 30 Nov 2022 06:50 AM
Last Updated : 30 Nov 2022 06:50 AM

தமிழகம் முழுவதும் 38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 1983-ம்ஆண்டு முதல் 2021 வரை 38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,635ஊழல் வழக்குகளை விரைந்துமுடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துநராக பணியாற்றி கடந்த 2018-ல் ஓய்வு பெற்றவர் அண்ணாதுரை. இவர் உட்பட போக்குவரத்து கழக ஊழியர்கள் பலர் மீது கடந்த 2003-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்த ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. இதை காரணம் காட்டி, அவருக்கான ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாதுரை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஎஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவு: மனுதாரர் கடந்த 2018-ல் எந்தபிரச்சினையும் இல்லாமல் ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், அவர்மீதுள்ள குற்ற வழக்கை காரணம்காட்டி, அவருக்கான ஓய்வூதிய பணப் பலன்கள் மறுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2021-ம்ஆண்டு வரை 38 ஆண்டுகளாகபல்வேறு விசாரணை நீதிமன்றங்களில் 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுபோன்ற ஊழல்வழக்குகளை நீண்ட காலத்துக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் வைத்திருந்தால், ஊழலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

மேலும், அது வழக்கின் தன்மையை நீர்த்துப்போகச் செய்து,ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்துதப்பிக்க வழிவகுக்கும். ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிக்காவிட்டால் ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும்.

மனுதாரரின் வழக்கை பொருத்தவரை, 4 வாரத்துக்குள் துறை ரீதியிலான விசாரணையை முடிக்க வேண்டும். அதுபோல, மனுதாரருக்கு எதிராக உள்ள குற்ற வழக்கையும் விரைந்து முடிக்க வேண்டும். தவிர, மனுதாரருடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்ட சிலர் ஓய்வு பெற்று, ஓய்வூதிய பலன்களை பெற்றுவிட்டதால், மனுதாரருக்கும் பகுதி ஓய்வூதிய பலன்களை வழங்கிவிட்டு, குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பிறகு எஞ்சிய பலன்களை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x