Published : 29 Nov 2022 03:22 PM
Last Updated : 29 Nov 2022 03:22 PM

போலீஸின் மனித உரிமை மீறல்: மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த பொய் புகாரில், தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளார். தான் மாற்றுத்திறனாளி எனக் கூறிய முருகானந்தத்தை தாக்கியதுடன் ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், 2020 மார்ச் 10-ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முருகானந்தம் தாக்கல் செய்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடு வழங்கவும், உதவி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் முதுகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இத்தொகையில் 4 லட்சம் ரூபாயை மாநில அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக காவலர் முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டனர்.

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பது தொடர்பாக மாவட்டந்தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு வழக்குச் செலவாக 25 ஆயிரம் ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x