Published : 29 Nov 2022 02:07 PM
Last Updated : 29 Nov 2022 02:07 PM

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் | கோப்புப் படம்

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sports persons Scheme- ELITE). பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme - MIMS). வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme - CDS)

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ் நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு (High Level Selection Committee) மூலம் ஆய்வு செய்ய்யபடும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் (Shortlisted Candidates) நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டங்களில் தேர்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகள் அவர்தம் காப்பாளர் தங்கள் முழுமையான விவரங்கள் மற்றும் 2 ஆண்டுகால இலக்குகள் (Deliverables and outcome for two years) குறித்த விவரங்களுடன் SDAT உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்கள் வெல்பவர்களுக்கு கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால் அதனை உரிமையாக கோர இயலாது. இத்திட்டங்களில் உதவித்தொகை பெறுவோர், தாம் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும், போட்டி விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் SDAT-ஐ தங்கள் ஸ்பான்சராக வெளிபடுத்தும் வகையில் சீருடை அணிய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கனைகளுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை அவர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களை திரும்ப வழங்கிடும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும். திட்டத்தில் பயன்பெறும் வீரர்/வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள், காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள் (ஏதும் இருப்பின்) உள்ளிட்டவற்றை இணையவழியில் SDAT இணையதளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேக பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்.

உதவித்தொகை காலத்தில் மூன்று மாதங்கள் வரை (தொடர்ந்து/ தனித்தனியாக) விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாதவர்கள், ஆறு மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காதவர்கள், ஓர் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இயலாதவர்கள், இரண்டு ஆண்டுகள் வரை எவ்வித சர்வதேச பதக்கமும் பெறாதவர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

ஏற்கனவே அஞ்சல் வழியில் அல்லது நேரடியாக விண்ணப்பிருந்தாலும், மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x