

சேலம்: சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பகலில் சாரல் மழையும், இரவில் அதிக குளிரும் நிலவுகிறது.
வடகிழக்கு பருவ மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பகலில் மேகமூட்டமாக காணப்படும் நிலையில் மதியம், மாலை நேரங்களில் சில இடங்களில் சாரல் மழை பெய்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் ஸ்வெட்டர், மங்கி குல்லா உள்ளிட்டவற்றை அணிந்தபடி வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): ஆத்தூர் 28.6, கெங்கவல்லி 22, சங்ககிரி 20, தலைவாசல் 17, சேலம் 7.1, வீரகனூர் 7, கரியகோவில் 4 மி.மீ. மழை பெய்துள்ளது.