Published : 29 Nov 2022 05:23 AM
Last Updated : 29 Nov 2022 05:23 AM

பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட் தொழில் பூங்கா திறப்பு

தொழில் பூங்காவை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை நேற்று திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அமையவுள்ள தனியார் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.

தமிழக அரசின் 2022-23 பட்ஜெட்டில், கோவை, பெரம்பலூர், மதுரை,வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதியதொழில் பூங்காக்கள் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், அங்கு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.

அப்போது, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துக்கும் ரூ.1,700 கோடிமதிப்பில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தைவான்நாட்டைச் சேர்ந்த 10 தொகுப்பு நிறுவனங்களுடன், ரூ.740 கோடி முதலீட்டில், 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

50,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இவற்றையும் சேர்த்து, பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவுள்ள தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.5,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், மொத்தம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆ.ராசா, தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜாகுல்கர்னி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.வெங்கடபிரியா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்எல்ஏ ம.பிரபாகரன் கலந்து கொண்டனர்.

வானவில் மன்றம் தொடக்கம்

முன்னதாக, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில், திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் `வானவில் மன்றம்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 13,210 அரசுப் பள்ளிகளில், 6 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் 20 லட்சம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 710 தன்னார்வலர்கள் கருத்தாளர்களாக இடம்பெற்றுள்ளனர். முதல்கட்டமாக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 100 நடமாடும் அறிவியல் ஆய்வகங்களையும் முதல்வர் ஸ்டாலின்‌ கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் திருச்சி என்.சிவா, சு.திருநாவுக்கரசர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், மேயர் மு.அன்பழகன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x