ஜல்லிக்கட்டு நடைபெற மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்: இல.கணேசன் எம்பி வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு நடைபெற மீனாட்சியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்: இல.கணேசன் எம்பி வேண்டுகோள்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு நடக்க மீனாட்சியை பிரார்த்தனை செய்யுங்கள் என பாஜக எம்பி இல.கணேசன் பேசினார்.

மாமதுரை மக்கள் பேரவை சார்பில் அவருக்கு தொழில் வர்த்தக சங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. பாஜக மாநிலச் செயலர் ரா.னிவாசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.சுரேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பாஜக தலைவர் சசிராமன் வரவேற்றார். இதில் இல.கணேசன் பேசியதாவது:

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நியாயமான முறையில் சம்பாதித்தவர்கள் பயப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் பல கருத்துகளை பரப்புகின்றனர். இத்திட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தான் எதிர்த்து குரல் எழுப்புகின்றனர். நேர்மையாக சம்பாதித்த பணத்துக்கு நஷ்டம் வராது. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்து பேச பாஜகவுக்கு அருகதை இல்லை என திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார். உண்மையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில். அந்த ஆட்சிக்கு துணை நின்றது திமுக.

ஜல்லிக்கட்டு என்ன என்பதும், அதில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்பதும் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தெரியும். அதனால் தான் காளைகளை காட்சிப் படுத்தப்படும் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்கள் நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இறைச்சிக்காக மாட்டை வெட்டுவதற்கு தடை விதிக்கவில்லை. ஆனால், உயிருடன் உள்ள மாட்டுடன் விளையாட மட்டும் தடை விதிப்பதா? என சுப்பிர மணியன்சுவாமி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கையுள்ளது. சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் தான் மத்திய அரசுக்கு வேலை வரும். ஜல்லிக்கட்டு வழக்கில் நல்ல தீர்ப்பு வரட்டும் என மீனாட்சியம்மனை பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

விழாவில் மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனர் கே.சி.திருமாறன், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகர், மடீட்சியா அறக்கட்டளை பொருளாளர் கே.ஆர்.ஞானசம்பந்தன் உள்பட பலர் பேசினர். பாஜக புறநகர் மாவட்ட தலைவர் எம்.எச்.ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in