Published : 06 Dec 2016 05:40 PM
Last Updated : 06 Dec 2016 05:40 PM

கச்சத்தீவு புதிய தேவாலயம் திறப்பு ஒத்திவைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி புதன்கிழமை கச்சத்தீவில் நடைபெற இருந்த புதிய அந்தோணியார் தேவாலயம் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சார்பில் கச்சத்தீவில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய அந்தோணியார் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த மே 8 அன்று நடைபெற்றது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழக மீனவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் சேர்ந்து, தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசின் எதிர்ப்பினையும் மீறி கச்சத்தீவில் தேவாலயம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் கச்சத்தீவில் புதிய அந்தோணியார் தேவாலயத்தை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் டிச.7-ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக நெடுந்தீவு ஆயர் ஜெயரஞ்சன் அறிவித்தார்.

தொடர்ந்து புதிய தேவாலயத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு, கச்சத்தீவில் நடைபெற இருப்பது சிறிய விழா. எனவே தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. அதேபோல இலங்கை பக்தர்களுக்கும் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்தது.

ஆனால், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம், கச்சத்தீவு புதிய தேவாலயத் திருவிழா எளிய முறையில் நடப்பதால் ராமேசுவரம் பங்குத் தந்தைக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் பங்குத் தந்தை சகாயராஜினை கைபேசி மூலம் தொடர்பு கொண்ட யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறையவையடுத்து, கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம் திறப்பு விழா ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x