இன்றுடன் காலாவதியாகும் ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் - புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க அன்புமணி வலியுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் இன்றுடன் காலாவதியாவதால் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213(2)(ஏ)-இன்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும். அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசர சட்டம் காலாவதியாகிறது!

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுநரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. இதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in