Published : 26 Nov 2022 03:15 PM
Last Updated : 26 Nov 2022 03:15 PM

இந்தி திணிப்புக்கு எதிராக 85 வயது திமுக தொண்டர் தீக்குளித்து உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தி திணிப்புக்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த 85 வயது திமுக தொண்டர் தங்கவேல் (உள்படம்)

சென்னை: மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தாழையூரைச் சேர்ந்த 85 வயது திமுக தொண்டர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், "போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ள தாழையூரில் உள்ள திமுக கட்சி அலுவலகம் முன், அக்கட்சியின் முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவருக்கு வயது 85. இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். திமுக மீது கொண்ட பற்றால், அக்கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்களில் சிறைக்குச் சென்றுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமிருந்து பல்வேறு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர் தங்கவேல். இவர், மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இந்தியை திணித்து வரும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் தங்கவேல் மன உளைச்சலில் இருந்துள்ளாராம்.

இந்தநிலையில், இன்று (நவ.26) காலை, பி.என்.பட்டி போரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் திமுக அலுவகம் முன் காலை 11 மணியளவில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார் தங்கவேல். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே தங்கவேலு உடல் கருகி பலியானார்.

தங்கவேல் தீக்குளிப்பதற்கு முன், பி.என்.பட்டி போரூர் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், "மோடி அரசே, மத்திய அரசே, இந்தி வேண்டாம். தாய் மொழி இருக்க இந்தி கோமாளி எதற்கு? இந்தி எழுத்து மாணவ, மாணவிகள் வாழ்க்கையைப் பாதிக்கும். இந்தி ஒழிக... இந்தி ஒழிக" என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் இரங்கல்: தங்கவேல் உயிரிழந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த திமுக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன். இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம். இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம். ஏற்கெனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது.

போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். 'இந்தியைத் திணிக்காதே' எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை. தாழையூர் தங்கவேலுவின் குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x