

டிஜிட்டல் யுகத்தை நோக்கி நாடு முன்னேறுகின்ற வேளையில் கூட மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிநிலை தொடர்வது வேதனையளிக்கிறது என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கத்தில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் இழிநிலை இன்னும் இந்திய சமூகத்தில் தொடர்வதை சமூக சீர்திருத்தம் நிகழவே இல்லை என்பதற்கான முக்கிய காரணமாக சொல்லலாம்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால், அந்த சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப் படாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை, கறுப்புப் பண ஒழிப்பு என்று இருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கும் இருக்கும் அழுக்கை அகற்ற யோசிக்க வேண்டி உள்ளது'' என்று ரஞ்சித் கூறினார்.