Published : 25 Nov 2022 06:46 PM
Last Updated : 25 Nov 2022 06:46 PM

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவி நியமனங்களுக்கு காலக்கெடு எதுவும் இல்லை: மத்திய அரசு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ள காலக்கெடு எதுவும் வகுக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக நீதி பேரவை தலைவரான வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. கடந்த 9 மாதங்களாக தேசிய ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளது. இதனால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. எனவே அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பு செயலாளர் என்.எஸ். வெங்கடேஸ்வரன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய்ப்பட்டது. அதில் "ஆணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் மட்டும்தான் வரையறுக்கப்பட்டு உள்ளது. அவர்களின் பதவி காலம் முடிந்த பிறகு அடுத்ததாக நியமிக்கப்பட வேண்டியவர்களை தேர்ந்தெடுப்பதற்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக சுயநலமற்று பணியாற்றவர்களை கண்டறிவது, சமூக அரசியல் ரீதியாக அவர்களின் பணி உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தான் ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோரை நியமிக்க முடியும். இப்பதவிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நியமிக்க முடியும் என்று வரையறுக்க முடியாது. ஆணைய உறுப்பினர்களை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. அந்தப் பணிகள் விரைவில் நிறைவடையும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கே.பாலு குறுக்கிட்டு, "24 மணி நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்க முடிந்த மத்திய அரசால், பத்துமாதங்கள் ஆகியும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏன் நியமன செய்ய முடியவில்லை? ஆணையத்தின் காலியிடங்களை மத்திய அரசு உடனடியாக நியமிக்க உத்தரவிடவேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x