

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஆலந்தூர் 165-வது வார்டு கவுன்சிலருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் (56), உடல்நலக் குறைவால் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு சுதா என்ற மனைவியும், காவியா, அனன்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தின் உடல் ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடலுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜய்வசந்த் எம்பி, சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வி.என்.பி வெங்கட்ராமன் (ஓபிஎஸ்), மாநகராட்சி ஆலந்தூர் மண்டலக் குழு தலைவர் என்.சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இல்லத்தில் இருந்து இன்று காலைஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணபுரம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘பகுதிமக்களின் தேவைகளுக்காக முன்னின்றுஅவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்.அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், காங்கிரஸ் இயக்கத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘இளமை துடிப்போடும், சிரித்த முகத்தோடும் பழகுவதற்கு இனிய பண்பாளராக விளங்கிகாங்கிரஸ் கட்சிப் பணிகளில் அயராதுஉழைத்தவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்.அவரது மறைவு ஈடு செய்யவே முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.