Published : 24 Nov 2022 04:30 AM
Last Updated : 24 Nov 2022 04:30 AM

முதல்வரை வரவேற்கத் தயாராகும் திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி

திருச்சி: திருச்சி காட்டூரில் உள்ளஅரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.28-ம் தேதி வருகை தரவுள்ளதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.28-ம் தேதி திருச்சி வருகிறார். அன்றைய தினம் காலை திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல தமிழக முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

காட்டூரில் உள்ள இந்தப் பள்ளி 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு நிகழ் கல்வியாண்டில் 813 மாணவிகள் பயின்று வருகின்றனர். ஏழை, எளிய மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், நவீன ஆய்வகங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என நீண்டகாலமாக பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நவ.28-ம் தேதி திருச்சிக்கு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தப் பள்ளிக்குச் செல்லும் விவரம் இதுவரைஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில் 10 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் மா.பிரதீப்குமாரும், நேற்று முன்தினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு கூடுதல்தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகரும் இந்தப் பள்ளியைபார்வையிட்டு, ஆய்வு செய்துள்ளனர்.

மேலும், முதல்வர் வருகையையொட்டி பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களை இடிக்கும் பணி, பிற வகுப்பறை கட்டிடங்களுக்கு வண்ணம் பூசும் பணி, பழுதடைந்த மின் இணைப்புகள் மற்றும் விளக்குகளை சீரமைக்கும் பணி ஆகியவை தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பள்ளிக்குச் செல்லும் சாலை புதிதாக அமைக்கப்பட்டு, சாலையோரத்தில் உள்ள சுற்றுச்சுவர்களில் அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக அரசுத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “இந்தப் பள்ளிக்கு வரும் தமிழகமுதல்வர் இங்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், மேம்படுத்தப்பட்ட கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும் அடிக்கல் நாட்டுவார்” என்றனர். மேலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஸ்டெம் ஆன் வீல்ஸ்(STEM on Wheels) என்ற அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் குறித்த நடமாடும் ஆய்வகத்தை இந்தப் பள்ளியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், முதல்வர் வருகையின் முழுமையான நோக்கம் குறித்து அரசு அதிகாரிகள் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து, நவ.28-ம் தேதி மாலை கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேடு பகுதியில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். மறுநாள்(நவ.29) காலை அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைெபறும் அரசு விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x