Published : 14 Jul 2014 10:23 AM
Last Updated : 14 Jul 2014 10:23 AM
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த காட்சிப் போட்டியில் மாணவர்களுடன் நடிகர் ஆர்யா கால்பந்து விளையாடினார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. இதை முன்னிட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த காட்சி கால்பந்து போட்டியில் கல்லூரி மாணவர்கள் அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி அணிகளின் சீருடையில் கால்பந்து விளையாடினர்.
இதில் அர்ஜென்டினா அணிக்கு நடிகர் ஆர்யாவும், ஜெர்மனி அணிக்கு பிரபல பின்னணி பாடகர் கானா உலகநாதனும் கேப்டன்களாக விளையாடினர். இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் எதையும் அடிக்கவில்லை. இதையடுத்து டை பிரேக்கர் முறையில் அர்ஜென்டினா அணி ஜெர்மனி அணியை 4-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
இந்த போட்டி குறித்து நடிகர் ஆர்யா நிருபர்களிடம் கூறுகையில், “பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு நடக்கும் இந்த காட்சிப் போட்டியில் விளை யாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அர்ஜென்டினா அணி மிகவும் பிடிக்கும் ஆகையால் அந்த அணி சார்பில் விளையாடினேன்” என்றார்.
முன்னதாக பிஃபா இறுதிப் போட்டியினை கொண்டாடும் விதமாக விளையாட்டு வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த காட்சிப்போட்டியினை பச்சையப்பாஸ் ஹாரிங்டன் கால்பந்து அகாடமி ஏற்பாடு செய்தது.இதில் பச்சையப்பாஸ் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் ஹேமனாத், கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ஜோஸ் தங்கையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT