Published : 22 Nov 2022 01:28 PM
Last Updated : 22 Nov 2022 01:28 PM

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

கோப்புப் படம்|

சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: நேற்று (நவ.21) தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (நவ.22) வட தமிழகம், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23 மற்றும் 24ம் தேதிகளில் வட தமிழகம், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 என்ற அளவில் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று (நவ.22) தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழக - புதுவை கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x