Published : 22 Nov 2022 07:55 AM
Last Updated : 22 Nov 2022 07:55 AM

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு 40 சதவீதமாக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவம் 31-ல் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் தினசரி சராசரியாக 1,496 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 283, மாவட்ட அரசு தலைமை மற்றும் வட்டார மருத்துவமனைகளில் 494, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் 719 பிரசவங்கள் நடைபெறுகின்றன.

நம்பிக்கையின்மை காரணம்: இந்நிலையில் சில ஆண்டுகளாக, தமிழகத்தில் தனியார்மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரவசம் பார்ப்பதில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2011-ம் ஆண்டில், 28.3 சதவீதம் பிரசவம் பார்க்கப்பட்டது. அது படிப்படியாக குறைந்து, தற்போது 10.7 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

இதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், உட்கட்டமைப்பு வசதி இல்லாதது முக்கிய காரணமாகும். கர்ப்பிணிஅல்லது சிசு உயிரிழப்பு போன்றவை நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் 2011-ம்ஆண்டில் பிரசவம் பார்ப்பது 37.9 சதவீதமாக இருந்தது. தற்போது 49.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 2011-ம் ஆண்டில் 31.1 சதவீதம் இருந்து வந்த நிலையில், தற்போது 39.5 சதவீதம் பிரசவங்கள் நடைபெறுகின்றன.

தற்போதைய நிலையில், 60 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 40 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் தனியார் மருத்துவமனைகளில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x