Published : 22 Jul 2014 08:15 AM
Last Updated : 22 Jul 2014 08:15 AM

திமுக பிரமுகர் வெட்டி கொலை: அண்ணன், தம்பி உட்பட 3 பேர் போலீஸில் சரண்

அம்பத்தூரில் இறுதி ஊர்வல தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. இவரது மகன் ஜான் (25) திமுக பிரமுகர். இவரது வீட்டருகே வசிப்பவர் நாகராஜ். அதிமுக அம்பத்தூர் நகர இளைஞர் பாசறை தலைவர்.

முன் விரோதம்

கடந்த மாதம் அதே பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது ஜானுக்கும், நாகராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஜான் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நாகராஜை தாக்கினர்.

இது தொடர்பான புகார் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை நாகராஜ் வீட்டுக்கு வந்த உறவினர்கள் சிலர் இரவு 9 மணியளவில் புறப்பட்டனர்.

அதை கவனித்து கொண்டிருந்த ஜான், அவர்களை வழிமறித்து, ‘நீங்கள் யார்? இரவில் இங்கு வரக்கூடாது' என்று திட்டியிருக்கிறார்.

இது குறித்து உறவினர்கள் கூறிய புகாரால் நாகராஜ் ஆத்திரமடைந்தார். சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நாகராஜ், அவரது தம்பி சந்தோஷ், நண்பர்கள் பழனி, அருணகிரி மற்றும் பெயர் தெரியாத ஒருவர் என 5 பேர் அரிவாளுடன் ஜான் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற ஜானின் குடும்பத்தார், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 பேருக்கும் வெட்டு விழுந்தது. அவர்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடினர்.

பின்னர், நாகராஜ் உட்பட 5 பேரும் சேர்ந்து ஜானை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். ஜான் இறந்ததை உறுதி செய்த பின்னர் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த கொலையால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அம்பத்தூர் உதவி ஆணையர் ராஜேந்திரன், ஆய்வாளர் ஆல்பின்ராஜ் மற்றும் போலீஸார் விரைந்து வந்து ஜானின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 7 பேர் அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜான், நாகராஜ் ஆகியோரது வீடுகள் ஒரே பகுதியில் உள்ளதால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜானை கொலை செய்ததாக நாகராஜ், அவரது தம்பி சந்தோஷ்குமார், அருணகிரி ஆகியோர் திங்கள் கிழமை காலையில் ஆவடி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். தலைமறைவாக இருக்கும் பழனி உள்ளிட்ட 2 பேரை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x