Last Updated : 21 Nov, 2022 06:54 PM

 

Published : 21 Nov 2022 06:54 PM
Last Updated : 21 Nov 2022 06:54 PM

கோவை - மங்களூரு சம்பவங்களுக்கு தொடர்பு உள்ளதா? - தனித்தனி குழுக்களை அனுப்பி போலீஸார் விசாரணை

விசாரணை நடத்தும் மங்களூரு போலீஸார்.

கோவை: கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு ஆகிய இரண்டு சம்பவங்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தனித்தனி குழுக்களை அனுப்பி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி சாலையில் சென்ற ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த கர்நாடக மாநிலம் ஷிவமோகாவைச் சேர்ந்த முகமது ஷரீக் (27) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களை போலீஸார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மங்களூரு போலீஸார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி கோவை கோட்டைமேட்டில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே நடந்த இந்த வெடிப்புச் சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் முதலில் விசாரித்து 6 பேரை கைது செய்தனர். உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 75 கிலோ வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், உயிரிழந்த முபின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்பதையும் கண்டறிந்தனர்.

அதாவது, கோவை கோட்டைமேட்டில், சங்கமேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகே கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. அதேபோல் மங்களூருவில் ஆட்டோவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியில் 100 மீட்டர் தூரத்தில் சிவன் கோயில் உள்ளது என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, கோயில்களை மையமாக வைத்து தாக்குதல் என்ற அடிப்படையில் கோவை கார் வெடிப்புச் சம்பவம், மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவம் ஆகியவற்றுக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேக்கின்றனர். அதனடிப்படையிலும் தனிப்படைக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மாநகரில் இருந்து இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படைக் குழுவினர் மங்களூருவில் ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்றுள்ளனர். அதேபோல், மங்களூருவில் இருந்து இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் கோவைக்கு வந்துள்ளனர்.

கோவை தனிப்படை போலீஸார், ஆட்டோ குண்டு வெடிப்பு தொடர்பான தகவல்களை அங்குள்ள போலீஸார் மூலம் விசாரித்து தகவல்களை பெறுவர். அதேபோல், இங்கு வந்துள்ள மங்களூரு தனிப்படை போலீஸார் கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பான தகவல்களை விசாரிக்கின்றனர். அதாவது, கார் வெடிப்பு சம்பவம் எப்படி நடந்தது, அதில் பயன்படுத்தப்பபட்ட வெடிமருந்துகள், கைது செய்யப்பட்ட நபர்கள், அவர்களின் பின்னணி, வாக்குமூலம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வர். அதை வைத்து இரண்டு சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது விசாரணையில் இறுதியில் தெரியவரும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x