Published : 21 Nov 2022 06:41 PM
Last Updated : 21 Nov 2022 06:41 PM

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள் உதவிப் பேராசிரியர்கள் நியமன விவகாரம்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் 

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என கல்லூரிகளின் முதல்வர்கள் விளக்க மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தகுதியற்றவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது .

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேராசிரியர்கள் தரப்பில், "உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் பேராசிரியர்கள் பணிக்கு அனுமதிக்கப்படவில்லை. வருகைப் பதிவேடுகள் கல்லூரிகளின் முதல்வர்கள் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது. அப்போது அறக்கட்டளை தரப்பில், "பேராசிரியர்கள் எவரும் பணிக்கு வரவில்லை. அவர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை" என வாதிடப்பட்டது.

இதையடுத்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டு மனுவுக்கு எண்ணிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பேராசிரியர்கள் வருவதை தடுக்கவில்லை என்பது குறித்து கல்லூரி முதல்வர்கள் தரப்பில் விளக்க அறிக்கையும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருந்தால் அதனையும் தாக்கல் செய்ய வாய்மொழியாக உத்தரவிட்டு, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x